ஏற்காடு, பிப்.21:ஏற்காட்டில் உள்ள மலைகிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் முழுமையாக கிடைக்கப்பெறுகிறதா என்பது குறித்து நேற்று கலெக்டர் கார்மேகம் தலைமையில் அனைத்து அரசு துறை தலைமை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தை தொடர்ந்து மலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து 9 ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொது மக்களிடம், பொறுப்பு அலுவலர்கள் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நேற்று பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மீது முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார். மலை கிராம மக்களுக்கு அரசு திட்டங்கள் முழுமையாக கிடைத்திடும் வகையில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு குறைதீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து ஏற்காடு பகுதியில் உள்ள மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? அவர்களுக்கு முழுமையான வசதிகள் கிடைக்கப்படுகிறதா என கலெக்டர் ஆய்வு செய்தார். அதன்பின்னர் ஏற்காடு தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பொது இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவிகளின் வருகை, மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், ஆவின் பொது மேலாளர் விஜய் பாபு, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, தனித்துறை கலெக்டர் மயில், இணை இயக்குனர் வளர்மதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.